Thursday, February 3, 2022

நங்கநல்லூர் விஜயம்

 சிறு வயதில் அப்பா அடிக்கடி அழைத்துச் செல்லும் இடம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில். ஆன்மிக புரிதல்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் நமக்கு கிடைக்கும் குடும்ப சுற்றுலா வாய்ப்பு என்கிற வகையில் அது ஒரு இனிய அனுபவமாகவே இருக்கும்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து பழவந்தாங்கல் வரை ரயில் பயணம். அதன் பின்னர் நங்கநல்லூர் வீதிகளில் நடை பயணம். ஆட்டோல போலாமா என்பதெல்லாம் அபச்சார சொல். அப்பா ஐம்பது மீட்டர் வேகமாக நடக்க அம்மா, அக்கா, அண்ணன் நான் அனைவரும் பேசி சிரித்தபடி பொறுமையாக பின் தொடர்வோம். நாங்கள் பேசி சிரிக்க சிரிக்க அப்பாவின் வேகமும் கூடும்.

இப்போது ஆலயத்தை நினைத்தாலும் ஞாபகம் வருவது விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையும், தரிசனம் முடித்து திரும்புபவர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தான்.  பல சமயங்களில் படைக்கப்பட்ட வடை மாலையில் இருக்கும் வடை நமக்கு வழங்கப்படும். காரமாக மிளகு மற்றும் ஏதேதோ போட்டு கரமுர என அருமையாக இருக்கும்

பல வருடங்களாக போகாத நிலையில் சில நாட்களாக அங்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பன் பிரசன்னாவுடன் கொளத்தூரில் இருந்து நங்கநல்லூர் புறப்பட்டோம்.

சின்ன வயதில் அப்பா வேகமாக முன் நடக்க அவரை பின் தொடர்ந்து செல்வோம். சில சமயம் இடப்புறம் திரும்பினாரா வலப்புறம் திரும்பினாரா என குழம்பி நிற்போம். இப்பொழுது கூகுள் கண்மணி காதில்  இப்படி திரும்பு அப்படி திரும்பு என சொல்லிக் கொண்டே வந்ததால் 45 நிமிடத்தில் ஆலயத்தை அடைந்தோம்.






சிறு வயது நினைவுகள் சிலிர்ப்பாய் எழுந்தன.  தரிசனம் முடித்து திரும்புகையில்  பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் கொடுத்தார்கள். வடை சுவை நாவில்  நாட்டியமாட எங்காவது கவுன்டர் சேல்ஸ் இருக்கிறதா என தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.

பல வருடங்கள் கழித்து ஆஞ்சநேயரிடம் அட்டென்டென்ஸ் போட்ட திருப்தியில் திரும்பினேன்.

மறுநாள் நடந்ததுதான் அதிசயம். 'நேற்று நீ என்னை பார்க்க வந்திருந்தல்ல.. இன்னைக்கு உன்னை நான் பார்க்க வர்றேன்' என்பது போல திங்கட்கிழமை காலை அலுவலகத்திற்கு வந்து நின்றார் ஆஞ்சநேயர்!




Monday, November 29, 2021

அதிசய மூங்கில் - விடாமுயற்சி




சீனாவில் ஒரு வகை அதிசய மூங்கில் உள்ளது. ஐந்தரை வருடங்களில் 80 அடி உயரம் அளவு வளரும் இது, முதல் 5 வருடங்களில் ஒரு அடி கூட வளர்வதில்லை. ஆனால் அதற்கடுத்த 6 மாத காலத்தில் சடாரென உயர்ந்து 80 அடி உயரத்தை எட்டுகிறது.

5 வருடங்களாக ஒரு அடி கூட வளராத அந்த மூங்கில் ஆறே மாதத்தில் அவ்வளவு உயரம் எழும்புவது எப்படி? அத்தனை காலங்களும் அது வெறுமனே தூங்கிக் கொண்டிருக்கவில்லை. நிலத்திற்கடியில் ஆழமாக தனது வேர்களை விஸ்தாரமாக வளர்த்துக் கொண்டு, உறுதியான அஸ்திவாரத்தை அமைத்துக் கொள்கிறது. இதன் காரணமாக அதனால் சொற்ப காலங்களில் அவ்வளவு கம்பீரமான உயரத்தை எட்ட முடிகிறது. 

இதுபோல நாமும் நமது திட்டங்களில், வேலைகளில், ஏதோ ஒரு மாபெரும் லட்சியத்தை அடைய நெடுங்காலம் சில நேரம் பயணிக்க வேண்டி வரும். உடனடி பயன்களோ பலன்களோ கிடைக்காமல் நாம் சோர்வுற்றிருப்போம். அந்நேரங்களில் இந்த அதிசய மூங்கிலை நாம் நினைவில் கொள்வோம். 

தொடர்ந்து நமது பயிற்சியை, நமது முயற்சியை பலப்படுத்திக் கொண்டு அந்த வேர்களைப் போல் விஸ்தாரமான அஸ்திவாரத்தை நமது லட்சியத்திற்கு அமைத்தால் சரியான தருணத்தில் நாம் விரும்பிய பலனும் பயனும் அந்த 80 அடி மூங்கில் போல் எழுந்து நிற்கும்.




Tuesday, April 7, 2020

தி ஷசாங்க் ரெடம்ப்ஷன்







கொரோனா எனும் கிருமியால் நவீன உலகம் அனுபவித்திராத சூழ்நிலை. யாவரும் வீட்டிற்குள். வேலைகள், தொழில்கள் முடக்கம். வரும் மாதங்கள், பொருளாதரம் குறித்த கவலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியாத நம்பிக்கை ஒளி. இந்நிலையில் நம்மை நாமே ரீசார்ஜ் செய்துக் கொள்ள, எதிர்காலம் குறித்த நம் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.  ஒரு திரைப்படம்!


தி ஷசாங்க் ரெடம்ப்ஷன் (The Shawshank Redemption)


உலக திரைப்படங்கள் குறித்த தகவல்களை தரும் IMDB.com இல்  உலக அளவில் ரசிகர்களது வாக்குகளின்படி டாப் ரேட்டட் திரைப்படங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்து நிற்கிறது ஷசாங்க் ரெடம்ப்ஷன். வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்களை ஆட்கொள்ள அப்படி என்னதான் இருக்கிறது இத்திரைப்படத்தில்...?


நாம் எவ்வாறான சூழ்நிலையில் சிக்கி சிறைபட்டு இருந்தாலும், ஒரு நாள் எல்லாம் நாம் விரும்பியபடி மாறும் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தால், முயற்சி செய்து கொண்டேயிருந்தால், நம் நிலை நாம் விரும்பியது போல் ஒரு நாள் நிச்சயம் மாறும். மாற்ற முடியும். நாம் கொண்ட  நம்பிக்கை வீண் போகாது என்பதே இத்திரைப்படத்தின் சாராம்சம்.


கதைக் களம் : 


தனது மனைவி மற்றும் அவரது காதலனை கொன்றதாக இரட்டை ஆயுள் தண்டனையுடன் ஷசாங்க் சிறைச்சாலைக்கு வருகிறார் வங்கி உயர் அதிகாரி ஆன்டி டுப்ரென்ஸ்.  வார்டன் நார்ட்டன் மற்றும்  கேப்டன் ஹேட்லியின் இரும்புப் பிடியில் கைதிகள் அவதியுறும் சிறைச்சாலை அது. 


இங்கு ஏற்கனவே கைதியாக இருப்பவர் ரெட். வெளியிலிருந்து சிகரெட், மதுபானம் மற்றும் சிற்சிறிய பொருட்களை வரவழைத்து உள்ளிருக்கும் கைதிகளுக்கு தருவிப்பதில் வல்லவர்.  ஆன்டியும் ரெட்டும் விரைவில் நண்பர்களாகிவிடுகின்றனர். தொடக்கத்தில் சிறையில் இருக்கும் மற்றொரு கும்பல் மூலம் ஆன்டிக்கு சுயபாலின துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது.


ஒருமுறை கேப்டன் ஹேட்லிக்கு ஏற்படும் நிதி கையாளுதல் பிரச்சனையை தக்க யோசனை தந்து உதவி புரிகிறார் ஆன்டி. இதன்மூலம் வார்டனின் பார்வை ஆன்டியின் மீது திரும்புகிறது.

சிறைச்சாலை, கைதிகளின் உழைப்பை பயன்படுத்தியும் ஆன்டியின் நிதி நிர்வாகத் திறனின் உதவியினாலும் வார்டன் ஊழல்கள் புரிந்து பெரும் பணம் ஈட்ட துவங்குகிறார். இதற்கு மாற்றாக ஆன்டி சிறைக்குள் இருக்கும் நூலகத்தை விரிவாக்கவும், கைதிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கவும்  வார்டன் தடையாக நிற்பதில்லை.

19 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் சிறைக்கு வரும் மற்றொரு  கைதி மூலமாக ஆன்டி குற்றமற்றவர் எனத் தெரிய வருகிறது.  இதன் மூலம் தன்னை விடுவிக்க வேண்டும் என ஆன்டி வார்டனின் கேட்கும் நிலையில் தனது ஊழல் குற்றங்கள் வெளியே கசிந்துவிடும் என்பதால் வார்டன் கடுமையாக மறுக்கிறார்.

ஏமாற்றமும் விரக்தியுமாய் காணப்படும் ஆன்டி ரெட்டிடம் வினோதமாக பேசுகிறார். நம்பிக்கையின் சக்தி குறித்தும் விடுதலைக்கு தான் தகுதியானவன் எனவும் கூறுகிறார். என்றாவது ரெட் விடுதலையானால் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்.

ஆன்டியின் இத்தகைய பேச்சுக்களினால் கவலையுறும்  ரெட் மற்றும் நண்பர்கள் குழாம் அவர் தற்கொலை செய்து கொள்வாரோ எனப் பயப்படுகிறது. அன்றைய நீண்ட இரவை கடினமாக கழிக்கிறார் ரெட்.

மறுநாள் காலை ஆன்டியின் செயல் அந்த சிறைச்சாலையையே திகைப்புக்குள்ளாக்குகிறது. அங்கிருந்து நாம் எதிர்பாராத திசையில் பயணிக்கும் திரைப்படத்தை நீங்களே பார்த்து ரசியுங்கள்.

ஆன்டியின் முடிவு என்ன, அத்தனை வருடங்களும் தனது புத்திக் கூர்மையால் சிறைக்குள்ளேயே அவர் செய்தது என்ன, வார்டனின் முடிவென்ன, ரெட் இறுதியாக ஆன்டி சொன்ன நம்பிக்கையின் வீர்யத்தை உணர்ந்தாரா என்பது ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் மீதிக்கதை.

இந்தத் திரைப்படத்தை பார்த்து முடிக்கையில் ஏற்படுத்தும் பாசிட்டிவ்வான பாதிப்பு அளவிட முடியாதது. மேலோட்டமாக மட்டுமே இப்பதிவில் கதை குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கடைசி அரை மணி நேரம் நமக்கு தரும் உத்வேகம், எதிர்பாராத கிளைமேக்ஸ், ஆழமான வசனங்கள், கைதேர்ந்த கலைஞர்களின் நடிப்பு என நம் மனதை சலவை செய்து புத்துணர்வாக்கி விடும் வல்லமை கொண்டது ஷசாங்க் ரெடம்ப்ஷன்.


இன்றும் இத்திரைப்படம் நம்பர் 1 இடத்தில் இருப்பதற்கு காரணம், இது சொல்லும் சேதி.. அது..

"நம்பிக்கை அளவில்லாத சக்தி கொண்டது.... என்றும் வீண் போகாது."


சில சிறைச்சாலை வன்முறைக் காட்சிகள்,  டைட்டிலில்  சில நொடிகள் வரும்  காட்சிகள் மட்டும்  சிறியவர்களுக்கு ஏதுவானது அல்ல.


- சுகுமார் சுவாமிநாதன், வலைமனை



Tags : The Shawshank Redemption in Tamil, ஷஷாங்க் ரெடம்ப்ஷன், ஷசாங் ரிடெம்ப்ஷன், ஷசாங் ரெடம்ஷன்

Saturday, March 28, 2020

உங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்






வீட்டில் இருக்க வேண்டிய இந்த சூழ்நிலையில் நேரத்தை உபயோகமாக செலவிட உள்ள வழிமுறைகளை தேடி வரும் பெற்றோர்களுக்கு வரப்பிரசதமாக அமைந்துள்ளது கூகுள் 3டி அனிமல்ஸ் தொழில்நுட்பம்.


இதில் குறிப்பிட்ட சில மிருகங்களை உங்கள் மொபைல் மூலம் உங்கள் வீட்டிலேயே காணலாம், அதன் அசைவுகளை, ஒலிகளை உணரலாம், செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள மிருகங்களில் ஏதோ ஒரு மிருகத்தின் பெயரை கூகுளில் தேடுங்கள். உதாரணத்திற்கு படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல 'Panda' என கூகுளில் தேடவும்.

வரும் முடிவுகளில் 'Meet a life-sized giant panda up close' என்கிற வாசகம் வரும். அதன் அருகில் 'View in 3D' ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பின்வரும் அடுத்த ஸ்கிரீனில் பாண்டா மிருகம் 3டியில் தெரியும். மீண்டும் அதனருகே வரும்
'View in your space' எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் கேமரா இயங்கத் துவங்கும்.

அப்போது வரும் குறிப்பைப் போல, உங்கள் கேமராவை தரையை நோக்கி பிடித்து லேசாக அங்கும் இங்கும் அசையுங்கள். சிறிது நொடிகளில் இப்போது உங்கள் வீட்டிற்குள்ளேயே முப்பரிமாணத்தில் பாண்டா அமர்ந்து மூங்கில் கடித்து சாப்பிட்டு ஒலியெழுப்ப ஆரம்பிக்கும்.

தற்போதைக்கு சிங்கம், சிறுத்தை, ஷார்க், வாத்து, ஆடு, பூனை, கழுகு, பென்குயின், பாம்பு, புலி போன்ற மிருகங்களை இந்த தொழில்நுட்பத்தில் காணலாம்.




Google 3D Animals - Augmented Reality - Article by Valaimanai.in

Friday, January 11, 2019

பேட்ட & விஸ்வாசம்



விஸ்வாசம்

எத்தனை வருடங்கள் ஆயிற்று இப்படி நடிப்பில் இறங்கி அடிக்கும் அஜித்தைப் பார்த்து. ரசிகர்களுக்கு முதல் பாதியே நல்ல விருந்து. பில்ட் அப்கள், ஊரே தரும் மரியாதை என வழக்கமான டெம்ப்ளேட்டில் படம் துவங்குகிறதே என நினைத்தாலும், பதினைந்து நிமிடங்களில் பிளாஷ் பேக் அஜித் முகம் காட்டிய பின் ஆசுவாசப்படுத்துகிறார்.


அலப்பறையான அஜித். வாய்ஸ் மாடுலேஷேன், மேனரிஸம்ஸ் என  சான்ட்விச், பிஸ்ஸா போல வறட்சியாக நடித்துக் கொண்டிருந்தவர், பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஒரு தமிழ்நாடு மீல்ஸ் பார்சல் சொல்கிறார்.


முதல் பாதியில் நயன்தாரா, லொகேஷன்ஸ், காஸ்ட்யூம்ஸ், கலர் டோன்ஸ் என கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இரண்டாம் பாதி ஓவர் டூ பாம்பே ஆகி தந்தை மகள் பாசம், குழந்தை வளர்ப்பு என நல்ல பேமிலி டிராமாவாக முடிகிறது.


தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு மாஸ் மசாலாவாக இல்லாமல் நல்ல கருத்தை வலியுறுத்தும் விதத்தில் இதுபோன்ற கதைக்களனில் நடித்த அஜித்தும், இதை வடிவமைத்த சிவாவும் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்.


தம்பி ராமையா, ரோபோ சங்கர் போன்றவர்களின் அபத்தமான மேக்கப், விவேக் உள்ளிட்டு அனைவரின் மொக்கை காமெடி, அடிக்கடி வரும் துரத்தல், அடிதடி என  படத்தில் சிலபல குறைகள் உண்டு. ஆனாலும் அவை இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் எனும் வகையே தவிர, அய்யோ சாமி ஆளை விடுங்கடா எனும் வகையல்ல.


பேமிலி ஆடியன்ஸ் தவிர்த்து பொது ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றமுடியாமால் போகலாம். ஆனால் அஜித்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி துள்ளலாக பார்க்கும் வகையில் தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து இந்த விஸ்வாசம்.



பேட்ட! 

 ஃபேன் மேட் டிரைலர், ஃபேன் மேட் போஸ்டர் பார்த்திருப்போம். இது ஃபேன் மேட் ஃபீச்சர் பிலிம். மொத்த படத்தையும் தலைவர் ரசிகராய் இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.


டைட்டிலில் துவங்கி எந்தெந்த கோணங்களில், விதங்களில், ஒலியில் ரஜினியை இதற்கு முன்னர் ரசித்தோமோ அதையெல்லாம் எடுத்துக் கொண்டு முதல் பாதி முழுவதும் காளியாட்டம் ஆடியிருக்கிறார் கார்த்திக்.


வசனம், காட்சியமைப்புகள், லொக்கேஷன்ஸ், நடிகர்கள் என முதல் பாதி ஹைஸ்பீடில் பறக்கிறது. பாடல்கள், பின்னணி இசை என அனிருத்தும் தன் பங்கிற்கு ஆட்டம் ஆடுகிறார். சிம்ரன் எபிஸோட் எல்லாம் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் எனும் ரகம்.


முதல் பாதி தந்த பரவசத்தை இரண்டாம் பாதி பதம் பார்க்கிறது. ரொம்ப இழுவையான காட்சியமைப்புகள், அதிகப்படியான ஆக்ஷன் காரம் என கொஞ்சம் பொறுமையை சோதித்து பிறகு முடியும் தருவாயில் சின்ன டிவிஸ்ட் அப்புறம் ஒரு குட்டிக் கதை டிவிஸ்ட் என சின்ன ஆறுதலோடு முடிகிறது படம்.


நவாசுதீன், சிம்ரன், விஜய் சேதுபதி அருமை. பாபி சிம்ஹா, சசிக்குமார் பரவாயில்லை. திரிஷாவெல்லாம் அநியாயம்.


இரண்டாம் பாதியில் பிளாஷ் பேக் தவிர்த்து வெறும் துரத்தல் பழிவாங்கல் என வெகு நேரம் ஆடாமல் அசையாமல் செல்லும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


முதல் பாதி மாஸ். இரண்டாம் பாதி மரணம்!



Viswasam, Petta, Review, Valaimanai

Friday, June 3, 2016

இறைவி - புரிந்ததும் புரியாததும்



"ஆமா.. படம் போனீங்களே எப்படி இருந்துச்சு.. நல்லா இல்லையா...?"

"அப்படிலாம் ஒண்ணும் இல்லையே ஏன் கேட்குற.."

"இல்ல.. வழக்கமா படத்துக்கு போயிட்டு வந்தா.. படம் நல்லா இருந்தா தங்கு தங்குன்னு குதிப்பீங்க.. மொக்கையா இருந்தா அமைதியா இருப்பீங்க.. இப்ப வந்து பத்து நிமிஷமா வாயே திறக்கலையே அதான் கேட்டேன்."

"ஹே.. சே... சே.. அப்படி சொல்றியா,,, படம் மொக்கைலாம் இல்ல.. நல்ல கதையுள்ள படமே வர்றது இல்லன்னு சொல்றாங்கல்ல.. அதுக்கு நல்ல துவக்கமா.. பேய், காமெடி டெம்ப்ளேட் படங்களில் இருந்து மாறுதலா ஹெவியா ஒரு நல்ல டிராமா மூவியா இறைவியை எடுத்துக்கலாம்.."

"அப்போ ரொம்ப நல்லா இருக்கா,,"

"அதுக்குன்னு அப்படியும் சொல்லிட முடியாது... அங்கங்க கொஞ்சம் ஸ்லோ, வயலன்ஸ்ன்னு சில மைனஸ்களும் இருக்கு.."

"அப்போ ஆவரேஜா.. ஒருவாட்டி பார்க்கலாம் வகை படமா.."

"நோ.. நோ..  இந்த படத்தை விமர்சனம்லாம் பண்ண மனசு வரலை... இது ஒரு அனுபவம்.. நல்ல பவர்புல் காஸ்டிங், ஸ்டிராங்கான கதை, கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து பார்க்கிற மனநிலை இருந்தா நல்ல ரசனையான புராடக்ட் இந்த படம். பொதுவா நல்லா இருக்குன்னும் சொல்ல முடியாமா மோசம்னும் சொல்ல முடியாத வகை படங்களுக்கு வேணா ஆவரேஜ், ஒன் டைம் வாட்ச்னு அடிச்சிவிடலாம்... ஆனா இந்த படத்தை கூட்டத்தோட கூட்டமா அப்படி சொல்ல முடியாது."

"வேற எப்படி சொல்லலாம்..?"

"அதான் புரியாம பத்து நிமிஷமா யோசிட்டு இருக்கேன்!"

"அடப்பாவமே...  அப்போ கதையையாச்சும் சொல்லுங்க எனக்காச்சும் புரியுதா பார்ப்போம்.."

"அதை சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரும்மா.."

"யாரு..??"

"கார்த்திக் சுப்புராஜ்"

"அதாரு.,..??"

"படத்தோட டைரக்டர்"

"உங்கக்கிட்ட எப்போ சொன்னாரு... உங்க பேஸ்புக் பிரண்டாக்கும்.."

"இதென்னடா சோதனை..  பொதுவா பிரஸ் நோட்ல சொல்லியிருக்காரும்மா.."

"யாரோ எவரோ பிரஸ்ல சொன்னதுலாம் ஞாபகம் இருக்கு.. படம் முடிஞ்சு நான் என்னென்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்.. அதுல எத்தனை வாங்கிட்டு வந்து இருக்கீங்க பாருங்க.. இத்தனைக்கும் காலையில கழுதை மாதிரி கத்தி கத்தி அனுப்பினேன்... அஞ்சு பொருள் சொன்னா.. அதுல நாலு பொருள் காணும்.. "

"ஐயாம் வெரி சாரிம்மா.. இறைவி பார்த்தா ஒரு வாரமாச்சும் மனசு பாதிக்கும்னு சொன்னாங்க.. அதான் படம் தந்த பாதிப்புல மறந்துட்டேன் போல..."

"யாரு சொன்னாங்க.."

"அவங்களே மேக்கிங்-வெப் சீரிஸ்ல சொல்லிக்கிட்டாங்க..."

"ஏங்க படுத்துறீங்க..  எல்லா படமும் பார்க்க மாட்டேன்.. இது சயின்ஸ் பிக்ஷன் படம் சூர்யா நடிச்சது.. இது ஜிகர்தண்டா எடுத்தவரு படம்.. இது அப்படியாக்கும.. ஆணை பூனைன்னு ஒவ்வொரு படத்துக்கும் என்னத்தையாவது சொல்லிட்டு போக வேண்டியது.. சினிமான்னா எல்லாம் ஞாபகம் இருக்கு.. நான் சொல்ற பொருள் வாங்கிட்டு வர மட்டும் மறந்து போயிடுது இல்ல... சொல்றதை காதுல வாங்குறதில்லை.. என்ன பார்த்தா எப்படித்தான் தெரியுதோ.. ஒரு மனுஷியாவே மதிக்கிறது இல்ல.."

"அய்யோ.. இப்ப புரிஞ்சிடுச்சு.... இறைவிலயும் இதைத்தான்..."

"அடிங்ங்ங்ங்ங்....."

Thursday, March 26, 2015

இந்தியா - ஆஸ்திரேலியா | லைவ் பிளாக்கிங்


5:32 pm

சோர்ந்து போகவும் வசை பாடவும் இது 2007க்கு முந்தைய காலகட்டம் அல்ல. கோப்பைகள் எங்களிடம் நிறைந்திருக்கிறது. வெற்றி எங்களுக்கு பழக்கமாகி இருக்கிறது. ஒருவர் அவுட் ஆனதும் மற்றவர்கள் வரிசையாய் பின் செல்லும் தலைமுறையில் பிறந்து அந்த Fear of Failure மனப்பான்மையையே பார்த்து வளர்ந்த எனக்கு கடந்த பத்தாண்டுகளாய் யாரையும் எதிர்கொண்டு கடைசிவரை போராடும் தன்னம்பிக்கையை தோனி & கோ கற்றுத்தந்திருக்கிறார்கள். Respect, Salute, Won hearts, Legend போன்ற அலங்கார வார்த்தைகளால் தோனியின் தலைமைப் பண்பினையும் ஆற்றலையும் வர்ணிக்க வேண்டியதில்லை. சிம்பிளாக Leader என்றே சொல்லலாம். அந்த சொல்லின் அப்பட்டமான அர்த்தமாய் விளங்குபவர் அவர். இல்லை 'தல' என்றும் சொல்லலாம். இன்னும் கொஞ்சம் மெர்சலாகவும் இருக்கும்.

நாள் முழுவதும் இணைந்திருந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி!


4:52 pm

ஏற்கனவே ICC ன்னா Indian Cricket Council ங்கிறாங்க. அப்புறம் நாங்களே டோர்னமென்ட் நடத்தி எங்களுக்கே கப் தந்துக்கிட்டோம்ங்கிற அவப்பெயர் எதுக்குப்பா... ?  # ஏத்தி விட்டு அழகு பார்க்கிறவன்டா இந்த தமிழ்செல்வம்.
முத்தமிழ் கவிஞன் நான். தமிழ்த்தாயின் புதல்வன் நான்

4:42 pm 

இறைவா.. குவார்ட்டர் பைனல்ஸ் தாண்ட முடியாமல் வாட்டர் குடித்துவிட்டு இப்பொழுது கலாய்க்கும் ஃபாரினர்ஸ்ஸை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆனால் யுவராஜ் சிங் இல்லை, சச்சின் இல்லை என  புலம்பும் இந்தியர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.

4:36 pm

விடு தல. 2011 வோர்ல்ட் கப்பே ஷெல்ப்லதான இருக்கு. அதை எடுத்து பாப்பாக்கிட்ட கொடுத்திட்டா போச்சு .. அவ்வ்வ்..

4:22 pm

அட கோஹ்லி, ஜடேஜா எல்லாரையும் விடுங்கப்பா. ஒரு பெரிய மனுஷன் இன்னைக்கும் பொறுப்பில்லாம உட்கார்ந்து எம்.டி.எஸ் ஹோம்ஸ்பாட் வித்துட்டு இருக்கலாமா.. என்ன மாமா இப்படி பண்றீங்களே மாமா


3:58 pm

ஒருவேளை இப்படி இருக்குமோ. இதுவரை செஞ்சுரி அடிக்காதது ஜடேஜாதான். ஒருவேளை அப்படி இருக்குமோ...?


3:05 pm

தல வந்துட்டாரு. வொன் ஹார்ட்ஸ், டயமன்ட், ஸ்பேட், கிளாவர்லாம் வேணாம் கேமையே வின் பண்ணிடு தல.


3:01 pm

அப்பாடா ரெய்னா அவுட்டு. ஹே சீக்கிரம் அந்த ஏசி விளம்பரத்தை போடுங்கப்பா. டெல்லி கணேஷ் என்னா அழகா ஹிந்தி பேசுராரு. பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு.


2:45 pm

இந்த ஸ்டார்க் பையன் ஏதோ வம்பிழுக்குறான் போல. எங்களுக்கென்ன வந்துச்சு. சப் டைட்டில் போடலைன்னா எங்க ஆளுக்கு புரியாதே.. புரியாதே.. ஜாலி.. ஜாலி..

2:41 pm

ரோஹித்தும் போச்சா. இட்ஸ் ஆல் இன் தி கேம். இன்னைக்கு ரெய்னா கையாலதான் ரத்தம் பார்க்கனும்னு இருக்காங்க போல ஆஸி.

2:27 pm

ரைட்டு விடு. ஒரு யூத்தா இதை நாம புரிஞ்சிக்க முடியும். ஃபிகர் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணிட்டு இருந்தா ஒரு உண்மையான லவ்வர் பாய் எப்படிய்யா கிளாஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியும்? நீங்க கௌம்புங்க தம்பி. இந்த ஸ்கோர் எல்லாம் ரஹானேவே முடிச்சிடுவாப்ல.


2:25 pm

ஹே.. ஜான்ஸ் என்னய்யா 'மும்பை இந்தியன்ஸ் ரூட்டு தல'யவே முறைக்கிற.. பிளேயிங் லெவன்ல இருக்க மாட்ட தெரியும்ல.

2:20 pm

எங்கூர்ல குடும்பத்தோட பைக்ல போனா டிராபிக் போலீஸ் கூட நிறுத்த மாட்டாங்க. ஆகவே யெல்லோ பாய்ஸ் கோஹ்லி அண்ணன் பேமிலியோட வந்திருக்காரு பார்த்து டீசன்ட்டா நடந்துக்குங்க.

1:55 pm

ஆல் ஆஸ்தி பாய்ஸ்,
ப்ளீஸ் நோட், இதுக்கு பேருதான் மௌனமா விளையாடியே வெறுப்பேத்துறது #Indian version of sledging

1:25 pm

அந்த  குழந்தை முகத்தை பார்த்தா இன்னைக்கு சிங்கிளா 300 அடிக்கிற மூட்ல இருக்கிறாப்ல தெரியுது. எதுக்கும் தவான் நீங்க ஒரு 20 ரன் அடிங்க போதும்.


1:18 pm

நீங்க ஆஸ்திரேலியா பிள்ளையா இருக்கலாம். ஆனா எங்க தவான் ஆஸியோட மாப்பிள்ளைடா. பிள்ளைங்க இருந்தா சோறுதான் போடுவாங்க. ஆனா மாப்பிள்ளை வந்தா பிரியாணியே போடுவாங்க. மைன்ட் இட்.

1:13 pm

ஆக்சுவலா 2003 பைனல்ஸ்ல தோத்ததுக்கு பழிவாங்குற மாதிரி 359 அடிக்க விட்டு ஜெயிக்கிறதுதான் தோனியோட பிளான். ஆனா.. இந்த ஆஸி பசங்க அதை புரிஞ்சுக்காம நடுவுல நாலஞ்சு விக்கெட் விட்டாய்ங்கே. # பன்னி யெல்லா பெல்லோஸ்

1:00 pm

இந்தியாவின் சக்சஸ்புல் கேப்டன்னா சொல்றீங்கன்னு இந்த கங்குலி சிரிப்பை அடக்கிக்கிட்டே கருத்து சொல்றாப்புல. மேட்ச் இன்னும் முடியலை தாதாஜி. வெய்ட் அன்ட் சீ.


12:42 pm

லேடீஸ்னா கொஞ்சம் மேக்கப்லாம் போட்டுட்டு கௌம்பி வர்ற்துக்கு நேரம் ஆகும்தானே.. அதுக்காக அப்செட் ஆகி கேட்ச்சை விட்டியே ப்ரோ.. 


12:36 pm

நீ என்னய்யா 'ஜான்'சன்னு பேர் வச்சிக்கிட்டு முழம் சைஸுக்கு அடிக்கிற. செல்லாது செல்லாது.


12:34 pm

'வாட்'டுக்கும் வச்சாங்கல 'டாட்'டு. தம்பி அடுத்த ஆளை சீக்கிரம் அனுப்பு. ரெண்டு ஓவர்ல மிச்ச பசங்களையும் காலி பண்ணாதான் எங்களுக்கு ஒரு ஜாப் சாட்டிஸ்பேக்ஷன் வரும்.

12:24 pm

மஞ்ச சொக்கா போட்னு வன்ட்டா பெரிய கோல்ட்னு நெனப்பா.. தோ பாரு போல்டு.. கௌம்பு!


12:17 pm

நீங்க 4 அடிங்க இல்ல 6 தான் அடிங்க. ஆனா தோனி இருக்கிறவரை உங்களுக்கு 7.5 தான்டா...


12:00 noon

என்னய்யா கிளார்க்கு நீ? ஒரு டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் கூட எழுதலையாமே? அதான் எங்க இருநூறு தளபதி ரோஹித்துக்கு கோவம் வந்து உன்னை டெர்மினேட் பண்ணிட்டாரு.

11:53 am

அவுட்டுக்கு இந்த அம்பயர் அங்கிள்ஸ் கையை தூக்க மாட்றாங்க. அதான் அவங்க கையில ஏதாச்சும் சுளுக்கா இல்லை நல்லா வொர்க் ஆகுதான்னு அப்பப்போ நம்ம பாய்ஸ் பவுன்சர் போட்டு டெஸ்ட் பண்றாங்க. 


11:52 am

சர் ஜடேஜா சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. அப்படின்னா ஆஸி பாய்ஸ் இன்னைக்கு நீங்க சிரிப்பா சிரிக்க போறீங்கன்னு அர்த்தம். 

11:48 am

இவ்ளோ நேரம் கரன்ட் கம்பத்துல கட்டி வச்சு என் தலைவனை அடிச்சீங்களடா.. இப்போ பாரு அவரு கோவம் வந்து 'உள்ளே போ'ன்னு ஒவ்வொருத்தனையா அனுப்ப ஆரம்பிச்சிட்டாரு.


11:40 am 

இது IndvsAus இல்லைடா.. AusvsAshwin ன்னு எல்லாம் இரண்டு நாளா அலப்பறைய கௌப்பி விட்டவங்களுக்கு ஒரு விக்கெட் ஆச்சும் எடுத்து பெருமை செஞ்சுட்டீங்க அஷ்வின் .. பெருமை செஞ்சுட்டீங்க



11:30 am

தோனி இப்போ 'பீசு பீசா கிழிக்கும்போதும் இயேசு போல பொறுமை பாரு' மொமன்ட்ல இருக்காரு.. பேட் பண்ணும் போது பாருங்க.. பைப்பை பிடுங்கி அடிக்கப் போறாரு தல.
#பாட்ஷாடா... #தோனிடா..

10:59 am 

இவங்க வேற கமெண்டரியில தோனி வாயை அசைச்சா கூட ஏதோ வியூகம் பண்றாருங்கிறாங்க. அது வியூகம் இல்லீங்க.. சிவிங்கம்.

10:50 am 

விக்கெட் போகலைன்னு லீவை கேன்சல் பண்ணிட்டு மக்கள் மறுபடி ஆபிஸ் கிளம்புறாங்கன்னு தகவல் வருது. இப்போ ஸ்கோர் விடலைன்னா அப்புறம் ரோஹித் எப்படி 200 அடிக்கிறது, சின்ன தல கோஹ்லி எப்படி 100 அடிக்கிறது.. இவ்ளோ தூரம் பறந்து வந்திருக்கிற சின்ன அண்ணி டிஸ்ஸப்பாய்ன்ட் ஆயிட மாட்டாங்க..? இதுவும் ஒரு கேம் பிளானிங் மக்களே.. 

10:20 am 

பிறந்த குழந்தைக்கு ஃபாரின்ல இருந்து பொம்மை வாங்கிட்டு வர்றவன் தகப்பன். ஆனா வோர்ல்ட் கப்பையே வாங்கிட்டு போறவன்தான் என் தலைவன். ‪#‎தலதோனிடா‬ ‪#‎அண்ணிசாக்ஷிடா‬‪#‎குட்டிபாப்பாடா‬

10:18 am

பீல்டிங் நிக்க வைச்சா 'இன்னும் அவங்க வரலியே'ன்னு தேடிக்கிட்டு இருக்காப்ல கோஹ்லி. அதான் தல அவரை கூப்ட்டு ஒரு ஓவர் கொடுத்து கேமை கான்சென்ட்ரேட் பண்ண வச்சாரு. என்னா ஐடியா தல. சான்ஸே இல்ல தல. மெர்சல் தல.



#IndvsAus | Live Blogging | valaimanai

Wednesday, February 25, 2015

வலைமனை | ஃபீலிங்ஸ் 25 02 15



இதோ இன்னுமொரு உலகக்கோப்பை. ஆனால் 96ல்  பப்பிள் கம் ஸ்டிக்கரையோ 99ல் பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டுகளையே சேர்த்து வைத்து கிரிக்கெட் பார்த்த ஆர்வம் இப்பொழுது இல்லை.

ஒன்று வருடா வருடம் ஆடித்திருவிழா மாதிரி ஐ.சி.சி ஏதோவொரு கோப்பையை வைத்து கல்லா கட்டி கரகாட்டம்  ஆடத்துவங்கிவிட்டது காரணமாக இருக்கலாம். அல்லது வயதாவதாலும் இருக்கலாம். :)

டெக்கரேஷனுக்கு தூவும் கொத்தமல்லி தழை போல எப்பொழுதும் வந்து போகும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகள் பயமுறுத்துவது இந்த உலகக் கோப்பையின் ஹைலைட்.  ஜிம்முக்கு சென்று வந்தது போல் ஜிம்பாப்வே இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் 275க்கு மேல் அடித்திருக்கிறார்கள். போன உலகக் கோப்பையிலேயே ரவுடியாக ஜீப்பில் ஏறி விட்ட அயர்லாந்து இம்முறை வெஸ்ட் இன்டீஸ் முகத்திலேயே மார்க் போட்டுவிட்டார்கள். ஆப்கானிஸ்தானும் பிளேடை மென்று வாயில் வைத்தபடி யார் மேல் துப்பலாம் என காத்திருக்கிறது. ஆக மொத்தம் ஆரோக்யமான போட்டித் தொடர் இந்த 2015 உலகக் கோப்பை.

•••

கோலி அளவிற்கோ தவான் அளவிற்கோ தோனி ஆடுவதில்லை என்கிறார்கள். அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கிறேன். 'தல'ன்னு ஃபார்ம் ஆயிட்டா.. நாம ஆட வேணாம்..  விராட் கோலியவோ , அருண் விஜய்யவோ ஆட விட்டு நின்னு அழகு பார்த்தா போதும். :)

•••

ஐ, இசை, என்னை அறிந்தால், அனேகன் என வாரா வாரம் முதல் காட்சிக்கு சென்ற சாதனையை விட்டுவிட வேண்டாம் என கடந்த வெள்ளியன்று புக்கிங் சைட்டை ஒப்பன் செய்தால் புதிய ரிலீஸ் 'சண்டமாருதம்'.

120 ரூவாய் கொடுப்பது கூட ஓ.கே. ஆனால் சரத்குமார் படத்திற்கு பார்க்கிங் காசு ரூ.100 கொடுத்தால் படம் பார்க்கும் பொழுது மனசாட்சி மவுனமாக இருக்காது என்பதால் அப்படியே சைட்டை குளோஸ் செய்துவிட்டேன்.

•••

சின்ன வயதில் சர்க்கஸ் பார்த்தது.  கடந்த வாரம் சென்றிருந்தோம். சென்டிரல் ரயில் நிலையம் அருகே  மூர் மார்கெட் திடலில் ஒரு மெகா சைஸ் டென்ட் அடித்து நடத்துகிறார்கள். முன்பு போல் மிருகங்கள் என எதுவுமே இல்லை. எல்லாமே மனிதர்களின் சாகசம்தான்.


டிக்கெட் விலை ரூ.100, ரூ.200, ரூ.300 என இருந்தது. உள்ளே செல்லும் பொழுது அது கொஞ்சம் அதிகமாய்த் தெரிந்தாலும் நிகழ்ச்சி முடிவில் அத்தனை கலைஞர்கள், அமைப்பு, பொருட்கள் என இந்த சினிமா-சீரியல்-ஐபிஎல் காலத்தில் இவ்வளவு கட்டணத்தில் இந்த கலையை பராமரித்து நடத்துவதே பெரிய விஷயம் போல் இருந்தது.

கழிப்பறைகள் சென்னை புத்தக கண்காட்சி தரத்தில்  இருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். :)

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காக புரமோட் செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் சாகசம் செய்யும் வட, வடகிழக்கு மாநில பெண்களின் சின்ன சின்ன ஆடைகள் ஒன்றுதான் நெருடல்.

•••

இந்த எதிர்வினையை தோழிகள், சகோதரிகள் என பல பேரிடம் கேட்டிருக்கிறேன். எதற்காகவாவது ஐஸ்வர்யா ராயை இழுத்தால் பத்தில் எட்டு பெண்கள் அந்த பதிலை சொல்லி விடுவார்கள்.

அன்றும் அப்படித்தான், எங்கேயோ வெளியில் கிளம்புவதற்கு தங்கமணி தாமதமாக்கி கொண்டிருக்க, நான் கடுப்பில்,
 "ஐஸ்வர்யா ராய்க்கு கூட மேக்கப் போட்டு கிளம்ப இவ்ளோ நேரம் ஆகாது." என்றேன். உடனே பல்வேறு கால நிலைகளில் கேட்டு பழகிய அதே பதில் வந்தது.

"ஐஸ்வர்யா ராய் என்ன பெரிய அழகியா..?"
  "ஆமா.. இல்லையா பின்ன.. மிஸ் வேர்ல்ட் பட்டம் வாங்கியிருக்காங்கல...?"
"அவங்களுக்கு இன்டிரஸ்ட் இருந்துச்சு காம்பெட்டிஷன்ல கலந்துக்கிட்டாங்க... நாங்க கலந்துக்கலை. அவ்ளோதான்" என்றார் சிம்பிள் அன்ட் சீரியஸாய்.

சில வேளைகளில் ஏதோவொரு துணிக்கடையில் அந்த பளீர் லைட்டிங் வெளிச்சத்தில், பளபள கண்ணாடியில் முகத்தை பார்க்கும் பொழுது "ச்சே.. ஒரு ஆங்கிள்ல நாமளும் லைட்டா அழகாத்தான் இருக்கோம்.." என்று தோன்றும். ஆனால் அதை வெளியில் சொல்லும் தைரியம் வாய்த்ததில்லை. இந்த விஷயத்தில் இந்த பெண்களின் அநியாய தன்னம்பிக்கையும், துணிச்சலும் ஆச்சரியமூட்டுகிறது.

____________________________________________________

Best of  'பீலிங்ஸ்' : http://www.valaimanai.in/p/blog-page_9.html 
____________________________________________________

வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | புத்தகம் 
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Thursday, February 19, 2015

ஜப்பான் - நூல் அனுபவம்


‘இது முரம்… இது தூண்…’ என கண்ணை கட்டிக் கொண்டு யானையை தொட்டுப் பார்த்து உணர்ந்தவர்கள் போல, ஜப்பான் என்றால் சுறுசுறுப்பான மக்கள், தொழிலிலும் தொழில்நுட்பத்திலும் கில்லாடிகள், அணுகுண்டு வீசப்பட்ட நிலையிலும் தங்களது அசாதாரண உழைப்பால் மீண்டெழுந்தவர்கள் என அப்படியும் இப்படியுமாய் ஒரு புரிதல் வைத்திருந்தேன்.
கட்டை அவிழ்த்ததும்தான் இது யானை என்கிற பிரம்மாண்ட நிஜம் புரிவது போல், எஸ்.எல்.வி.மூர்த்தி அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஜப்பான் என்கிற புத்தகம் அறிவுக் கண்ணைத் திறந்து இதுதான் உண்மையான ஜப்பான் என உள்ளதை உள்ளபடி காண்பித்து பிரமிக்க வைக்கிறது.
ஜப்பானை தேவதைகள் உருவாக்கிய விதம் என நம்பப்படும் புராதான கதையில் துவங்கி இன்றைய தொழில்நுட்ப சாதனைகள் வரை வெகு விரிவாக ஜப்பான் குறித்து அறியத் தருகிறது இந்நூல். முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் ஜப்பானின் பங்கு, தன்னை வலிமையான சக்தியாக நிருபிக்க அந்நாடு எடுத்த முயற்சிகள், அதன் விளைவாய் கொடுத்த மிகப்பெரிய விலைகள் என பாட புத்தகங்களில் நாம் மேலோட்டமாக அறிந்திருந்த நிகழ்வுகளின் முழு பின்னணியும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.
“ஒட்டுமொத்த ஜப்பானிய மக்கள் வாழவும், விவசாயம் தொழில் நடத்தவும் இருக்கும் மொத்த நிலப்பரப்பு தமிழ்நாட்டின் 80% மட்டுமே.” என துவக்கத்திலேயே ஜப்பானின் உருவத்தை நம் மனதில் பதிய வைத்துவிட்டு அத்தகைய சிறிய இடத்தினுள் நடந்த பிரம்மாண்டங்களை ஆசிரியர் விவரிக்கையில் நமக்கு ஏற்படும் சுவாரஸ்யம் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட வைக்கிறது. ஜப்பானின் கற்காலம், மன்னராட்சிகள், சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடனான வியாபார உறவுகள், சமுராய்கள், மதம், மக்கள், சாதனைகள், அவமானங்கள், வல்லரசு கனவு, அதற்கான விலை, வீழ்ச்சியில் இருந்து மீள்வது, அமெரிக்க உதவி, தொழில் புரட்சி, இன்றைய சவால்கள் என ஜப்பான் குறித்து ‘அ’ துவங்கி ‘ஃ’ வரை மிக விரிவாக எடுத்துரைக்கிறது இந்த புத்தகம்.
ஒரு அரசியல், வரலாற்று புத்தகமாக, நமது இந்திய தேசம் எங்கே நிற்கிறது, இன்னும் எங்கே செல்ல வேண்டும் என யோசனைகளை இந்த புத்தகம் தோற்றுவிக்கும் அதே சமயம், ஜப்பான் மற்றும் ஜப்பானியர்களின் ‘கற்கும் பசி’ முதலிய குணாதிசயங்களில் இருந்து தனி மனித அம்சங்களாய் நாம் பின்பற்ற வேண்டியவைகளையும் கோடிட்டு காட்டி ஒரு சுய முன்னேற்ற புத்தகமாகவும் மிளிர்கிறது.
அத்தியாயங்கள் மிகப் பெரியதாக இருப்பதாலும் ஒரே அத்தியாயத்தில் பல கால நிலைகள் கடந்து பல விஷயங்கள் சொல்லப்படுவதாலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தரப்பட்டுள்ள ’என்ன படித்தோம்’ என்பதை நினைவூட்டும் ஹைலைட்ஸ் பகுதி புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. 192 பக்கங்கள் உள்ள ஒரு நான்-பிக்ஷன் புத்தகம். ஒரே அமர்வில் படிக்க நேரம் வாய்க்காமல் அவ்வப்போது விட்டுவிட்டு படிக்க நேரும் நிலையில், அந்த புத்தகம் நம்மை தொடர்ந்து ஈர்ப்பது அவசியம். அந்த வகையில் யாரோ அழைத்தால் ஒலியெழுப்பும் செல்போன் போல இந்த புத்தகம் தன்னை நோக்கி அழைக்கும் விதத்தில் சிறப்பம்சங்களை தன்னுள்ளே பெற்றுள்ளது.
மேம்போக்காக வளர்ச்சி, வீழ்ச்சி என் சொல்லிவிட்டு செல்லாமல் தேவைப்படும் இடங்களில் முக்கிய தரவுகளை தந்து படிப்பவர்களுக்கு சிறந்த புரிதல் அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கும் ஆசிரியரின் உழைப்பு பாராட்டுதலுக்குரியது. ஒரு தேசத்தின் பொருளாதாரம், ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி என்கிற விஷயங்களைப் பற்றிய அறிவு சுத்தமாய் எனக்கு இருந்ததில்லை. ஆனால் இந்த புத்தகம் ஜப்பானின் பொருளாதாரம் பற்றி சொல்லும் அதே வேளை ஒரு தேசத்தின் பொருளாதாரம் என்றால் என்ன ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, வளர்ச்சி, வீழ்ச்சி என்றால் என்ன என்பதையும் நமக்கு அறிய தருகிறது. உதாரணமாக பண வீக்கம், பண வாட்டம் பற்றியெல்லாம் போகிற போக்கில் மிக எளிமையாக புரிய வைக்கிறார் ஆசிரியர்.
எந்த இடத்திலும் வலிந்து வார்த்தை தோரணங்களை சேர்க்காமல் மிக இயல்பாக, அதே நேரம் வேகமாக செல்லும் நூல், சொல்லப்பட்டிருக்கும் கனமான உள்ளடக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. இவ்வகையில் இந்த புத்தகம், மாணவர்கள், அதிகார மையத்தினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய தரத்தில் அமைந்திருக்கிறது.
இதற்கு மேல் எவ்வளவு சொன்னாலும் கூட இந்த புத்தகத்தின் மதிப்பிற்கு இணையாக சொல்ல வேண்டிய விஷயங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகும் என்பதால் இந்த புத்தகம் குறித்தான மதிப்புரைக்கு முடிவுரையே இல்லை!
ஆன் லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-782-4.html
________________________________________________________________
வலைமனை பிற புத்தக பரிந்துரைகளை படிக்க : புத்தக அனுபவம்
வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | ஃபீலிங்ஸ்
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Friday, February 13, 2015

அனேகன் - ஐந்து நட்சத்திரங்கள்



"இவனை தூக்கிட்டு வர்றதுக்கு மூணு பேரா?" என தனுஷ்ஷை குறித்து ஒரு வசனம் வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்.  உண்மைதான். அவர் உருவம் அப்படி. ஆனால் தனுஷின் ஆற்றலை தனியாக டவுன்லோட் செய்து வைத்தால் முன்னூறு பேர் வந்தாலும் தூக்க முடியாது போல் இருக்கிறது. மூன்று வெவ்வேறு கால நிலை காதலனாக தனுஷ்.  மூனா ரூனா, அஷ்வின், காளி என கிரியேட்டிவ்வாக எதையாவது செய்யத் துடிக்கும் கலைஞனுக்கு செம ட்ரீட்டான ப்ராஜக்ட். தனுஷ் எப்படி செய்திருக்கிறார் என ஆராய்ந்து எழுத முடியாது. பம்மல் வ்வ்வே சம்பந்தம் சொல்வது போல அப்படியே அனுபவிக்க வேண்டியதுதான்.

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் என குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள் வரிசையில் கே.வி.ஆனந்த்.  பொதுவாகவே காதலை கசக்கி பிழியும் படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. அட.. புதுசா ஏதாச்சும் சொல்லுங்கய்யா என்பது போல் இருக்கும். "இதுவரை முழுமையான காதல் படங்கள் நான் செய்ததில்லை..  அனேகனில் பண்ணியிருக்கேன்"  என கே.வி.ஆனந்த் ஒரு பேட்டியில் சொன்னபோது,  'என்னடா.. மாற்றான் தந்த சறுக்கலில் இவரும் இப்படி ஆயிட்டாரே..  படம் காதல் கத்திரிக்காய் என ரொம்ப சிம்பிளா இருக்கும் போலிருக்கு' என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது பேட்டியில் 'க.மொ.வி.' இறக்க விரும்பாமல் தன்னடக்கமாய் இருந்துவிட்டு படத்தில் அதை செய்திருக்கிறார்.

கதையே கதாநாயகியை சுற்றி நகர்வதால் அழகு பதுமையாய் மட்டும் அல்லாமல் நடிக்கவும் செய்யும் பெண் வேண்டும். எங்க பாஸ் கண்டுபிடிச்சீங்க உதட்டை குவித்து காற்றில் முத்தமிட்டு  அசத்தும் அமைராவை?  மூன்று கால நிலைகளிலும் செம க்யூட் அன்ட் ஸ்வீட். தொடர்ந்து ஐ, இசை இரண்டு படங்களிலும் வெளி மாநில/நாட்டு கதாநாயகிகளின் மொழிக்கு பொருந்தும் அல்லது பொருந்த வைக்கப் பட்டிருக்கும் உதட்டசைவு தமிழ் சினிமாவிற்கு ஆரோக்யம்.

கனக்ஷன்ஸ் ஜெகன் ஒரு படத்தில் இருந்தால் அந்தப்  படத்தை சென்சாருக்கு அனுப்பாமலே 'ஏ' சர்டிபிகேட் தந்துவிடலாம் என்கிற பொதுவிதி இந்த படத்தில் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு வசனங்களை தவிர அவரது வால்யூமை குறைத்தே வைத்திருக்கிறார்கள்.

முதல் பாதி கார்த்திக் சூப்பர். இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம்  சூப்பராக இருந்திருக்கலாம். 'இசை' போன்ற ஒரு ஸ்கிரிப்டில் சத்யராஜ் துவம்சம் செய்தது போல் அனேகனில் வாய்ப்பு இருந்தும் கார்த்திக் கொஞ்சம் குறைவாகவே செய்திருக்கிறார். இல்லை அவர் டிசைனே அப்படித்தானா தெரியவில்லை.

ஓரு பாடலின் துவக்கம் முதல் முடிவு வரை தியேட்டர் இடைவிடாமல் அதிர்ந்து கொண்டே இருந்தது கடைசியாய் எப்போதென ஞாபகம் இல்லை. டாங்கா மாரியில் ஸ்பீக்கரை விட ரசிகர் குரல் தெறிக்கிறது. வெறும் குத்தாட்ட பாடலாக இல்லாமல் அதற்குள்ளும் கதையை வைத்ததற்கு ஸ்பெஷல் சபாஷ். ஆனால் அதற்கடுத்தாய் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  'ரோஜா கடலே' பாடலை அப்படி கிராபிக்ஸ் பேக்கிரவுண்ட் லொக்கேஷன்களை வைத்து சுமாராய் காண்பித்தற்கு அந்த சபாஷை திரும்ப வாங்கி கொள்ள வேண்டும். ஹாரிஸ் இவ்வளவு அழகாக பாடல் போட்டும் இப்படி பண்றீங்களேம்மா...?

முதல் அரைமணி நேரம் அறுபதுகளில் பர்மா எபிசோட், பின்னர் இடைவேளை வரை இன்றைய காலகட்டம். இடைவேளை முடிந்ததும் எண்பதுகளின் சென்னை, பின்னர் இன்றைய நிகழ்வு என திறமையாக கட்டமைக்கப்பட்ட இந்த சயின்ஸ், பேன்டஸி, லவ் சப்ஜெக்ட், தமிழ் எழுத்துலகில் மின்னி பின் திரையிலும் மின்னத் தெரிந்த வெகு சொற்பமானவர்கள் பட்டியலில் சுபாவின் பெயரும் எப்படி இடம் பெற்றது என்பதற்கு தரமான சான்று.

தமிழுக்கு கொஞ்சம் புதிரான புதிதான கதை, அடுத்தடுத்து பரபரப்பாய் நகரும் காட்சிகள், அருமையான ஆழமான காதல் எபிசோட்ஸ், ஆங்காங்கே டிவிஸ்ட்ஸ் அன்ட் டர்ன்ஸ், நடிகர்களின் சிறப்பான பெர்பார்மன்ஸ், துள்ளலான இசை இவை எல்லாவற்றையும் சிறப்பாக அசெம்பிள் செய்யத் தெரிந்த கெட்டிக்கார இயக்குனர் என ஒரு சிறப்பான கமர்ஷியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது அனேகன்.

2 மணி 40  நிமிடங்களும் கொடுத்த ரூ.120க்கு ரூ.1000 கிடைத்தது போல் ஒரு திருப்தி. இது போன்ற கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட்டிற்கு இண்டு இடுக்கு குறைகளை வைத்துக் கொண்டு மூணரை, நாலு ஸ்டார்கள் தருவது பாவம். நான் தருகிறேன் கே.வி.ஆனந்த்... இந்தாங்க பிடிங்க 5 ஸ்டார்ஸ்  ★★★★★



வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | புத்தகம் | ஃபீலிங்ஸ்
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Tags: Anegan, Anegan Review, KV Anand, Dhanush, Amyra, Harris Jayaraj, AGS Productions